சென்னை: இலங்கை நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இலங்கை வாழ் மக்களுக்கு கடந்த மாதம் முதற்கட்டமாக 45 கோடி ரூபாய் மதிப்பில் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு தனது ஒரு நாள் ஊதியத்தை விட்டுக் கொடுக்க விருப்பம் இல்லை என்று சென்னை பெருநகர காவல் துறையில் உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பிரிவில் தலைமைக்காவலராக பணிபுரியும் ஜனார்த்தனன் என்பவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அதில் ‘‘நான் தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து 18 வருடங்கள் பூர்த்தி செய்து 19ஆவது வருடம் நடந்து வருகின்றது. தமிழ்நாடு அரசு சார்பாக, அரசு அலுவலர்கள் ஒரு நாள் ஊதியத்தை இலங்கை அரசுக்காக விட்டுக் கொடுக்க கீழ்க்கண்ட காரணங்களால் எனக்கு விருப்பம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் இலங்கை நாட்டினர்.
நமது தமிழ் இனத்தை கொன்ற இலங்கை அரசாங்கம். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அதில் காவல் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டதோடும் மற்றும் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் இலங்கையர். அரசுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்புவித்த, பெற்ற பணபலனை தற்போது ஈட்டிய விடுப்பு ஒப்புவித்தல் ஆணையை அரசு ரத்து செய்ததால் ஆண்டுக்கு 15 நாள்கள் ஊதிய பலன் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு DA (அகவிலைப்படி) அறிவித்துள்ளது.
ஆனால் அதை நமது தமிழ்நாடு அரசு இன்று வரை DA அறிவிக்கவில்லை. நீதியரசர் கிருபாகரன் பலமுறை காவலர்களுக்கான ஊதியம் குறைவினை ஏற்றி தர பலமுறை கோரியும், அதனை தமிழ்நாடு அரசு இதுநாள் வரை செவி சாய்க்கவில்லை. மேலும், “தன்னை மிஞ்சி தான் தான தர்மம்” ஆகையால் அரசு அண்டை நாடான இலங்கைக்கு உதவி செய்தல் நல்ல எண்ணம்.
ஆனால், எனது குடும்பத்தை பராமரிக்கவே என்னுடைய சம்பளம் போதுமானதாக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் எனது ஒரு நாள் ஊதியத்தை அரசுக்கு விட்டுக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை என்பதை இதன் மூலம் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் மதுபான காலிப்பாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை: கொந்தளித்த குடிமகன்கள்!