திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பழையக்கோட்டை கிராம மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து பத்து நாட்களுக்கும் மேல் குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 32 பேருக்கு எதிரான வழக்கு காங்கேயம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு காரணமாக இரண்டாம் நிலை காவலர் பணி வாய்ப்பை இழந்த நித்தியானந்தம் என்பவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீண்ட காலமாக குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியான போராட்டம் மூலமாகவே வெளிப்படுத்துவார்கள். குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்வது என்பது அரசு இயந்திரத்தின் பக்குவத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூறி, குடிநீர் கேட்டு போராடியதற்காக 32 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.