திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் இளையராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், திருவேற்காடு பகுதியில் உள்ள சூசையா நகர், நூம்பல் கிராமத்தில் 2,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவுப்பொருட்கள் மற்றும் கழிவு நீர் லாரிகள் மூலம் எடுத்து வரப்பட்டு நூம்பல் பகுதியில் கொட்டப்படுகிறது.
இதனால், துர்நாற்றம் வீசுவதோடு மக்கள் வாழ முடியாத சூழலும் ஏற்பட்டு வருகிறது. கழிவு நீரை எடுத்து வரும் லாரிகள் சாலைகளின் நடுவே ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே, திருவேற்காடு நூம்பல், சூசையா நகர் பகுதிகளில் கழிவு நீர் கொட்ட தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவேற்காடு நகராட்சி ஆணையர் சித்ரா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,'மழை நீர் வடிகாலில் கழிவு நீரை கொட்டிய லாரிகளை பறிமுதல் செய்து, அந்த லாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுபோன்று நடவடிக்கைகள் மேற்கொண்டு 21 லாரிகளை பறிமுதல் செய்து இரண்டு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அனுமதியின்றி கழிவு நீரை கிராமப் பகுதிகளிலும், மழை நீர் வடிகால்களிலும் கொட்டும் லாரிகளை கூடுதல் அபராதம் விதித்து பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். அப்பகுதிகளில் லாரிகளில் கழிவு நீர் கொண்டு வந்து கொட்டுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், தாசில்தார், மதுரவாயால் காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.