பழமையான பச்சையப்பன் அறக்கட்டளைக்கான ஒன்பது நிர்வாகிகள் தேர்தல் கடந்த மார்ச் நடைபெறுவதாக இருந்தது. முறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்காமல் தேர்தலை நடத்த கூடாது எனவும் அறக்கட்டளையைச் சேர்ந்த கந்தசாமி கல்லூரியில் அம்மா அரங்கம் முறைகேடாக கட்டப்பட்டுள்ளது என்றும் லா அசோசியேசன் தலைவர் எல்.செங்குட்டுவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், அறக்கட்டளைக்கான தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுரேஷ்குமார், அறக்கட்டளைக்கான நிர்வாகிகளை 9 லிருந்து 10 பேராக அதிகரிக்க வேண்டும். நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க துணைவேந்தர், ஆடிட்டர், மூத்த வழக்கறிஞர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்க வேண்டும்.
மேலும், அறங்காவலர்கள் தேர்தலை ஆறு மாதத்திற்குள் நடத்த வேண்டும், கந்தசாமி கல்லூரி வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கம், அம்மா அரங்கத்திற்கு முறையான அங்கீகாரத்தை அரசிடம் பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் அறங்காவலர் குழு தேர்ந்தெடுக்கப்படும் வரை ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகத்தை நிர்வாக தலைவராக நியமித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க...உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை