சென்னை: மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கோரியது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஆக.17) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
27 விழுக்காடு இட ஒதுக்கீடு எப்படி முடிவெடுக்கப்பட்டது என மத்திய அரசு தெரிவிக்கவில்லை. 27 விழுக்காடு இட ஒதுக்கீடு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
திமுக வழக்கறிஞரின் கேள்வி
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மொத்த இட ஒதுக்கீடு 50 விழுக்காடு மிகாமல் மாநில இட ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் எனத் தெரிவித்த மத்திய அரசு, அதை மீறும் வகையில் பொருளாதார ரீதியில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது எப்படி எனக் கேள்வி எழுப்பினார்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், ஓபிசி பிரிவினருக்கு 27 விழுக்காடு என்பதை 40.5 விழுக்காடு வழங்க வேண்டும்" என்றார்.
அப்போது நீதிபதிகள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களைப் பொறுத்தவரை, இந்த இடங்களுக்கு மாநில அரசு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை எந்த அடிப்படையில் நிரப்புவது என முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு 22.5 இட ஒதுக்கீடு வழங்கிய பின், 50 விழுக்காட்டில் மீதமுள்ள 27.5 விழுக்காடு இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1986ஆம் ஆண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் அமலுக்கு வந்தன. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுச் சட்டம் 1993ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போது, அதைப் பின்பற்ற வேண்டும் என அப்போது யாரும் கோரிக்கை விடுக்கவில்லை.
பொருளாதார ரீதியில் உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சேர்க்கும் போது, மொத்த இட ஒதுக்கீடு 59.5 விழுக்காடு ஆகிவிடும்.
50 விழுக்காடு இட ஒதுக்கீட்டு வரம்பை மீறும் வகையில் உள்ளது. இந்த இட ஒதுக்கீடு குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை (ஆகஸ்ட் 18) பிற்பகல் 2:15-க்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: வக்ஃபு வாரியம் சொத்து முறைகேடு வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு