சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, சமூக வலைதளத்தில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பப்படுவதாக டிஜிபி அலுவலகத்தில் இன்று (பிப்.09) புகார்மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'சமூக வலைதளத்தில் என்னைப்பற்றி அவதூறு பரப்பப்படுகிறது. எனக்கு மிரட்டல் கால் அதிகமாக வருகிறது. இறுதியில் புகழேந்தி இறந்துவிட்டார் என செய்தியை பரப்பத் தொடங்கியுள்ளனர். இது குறித்த தகுந்த ஆதாரங்களை டிஜிபி அலுவலகத்தில் வழங்கியுள்ளேன்.
ஆதாரத்துடன் கொடுத்திருப்பதால் 24 மணி நேரத்தில் அவர்கள் கைதாவார்கள் என நம்புகிறேன். எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி இப்படி நடந்து கொள்வார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸை கண்டவாறு திட்டி பதிவு போடுகின்றனர்.
தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினோம். தமிழ் மகன் உசேன் ஒரு சார்பாக நடந்து கொண்டார். அதனால் வேட்பாளரை திரும்பப்பெற்றோம். இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கிவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னைப் பற்றியும், ஓபிஎஸ் பற்றியும் அவதூறாக கருத்துகளை வெளியிட்டு தேவையில்லாத வேலையை செய்து வருகிறார்கள்.
ஈரோடு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் வாங்குவாரா என்று பார்க்கலாம். தேர்தல் முடிவு வரும்போது டெபாசிட்டை கூட வாங்க முடியாவிட்டால் கட்சியை ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்க வேண்டும். பாஜக மீது மரியாதை வைத்திருக்கிறோம். அதற்காக அண்ணாமலை சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது. அண்ணாமலையை கர்நாடகாவிலிருந்து பார்த்து வருகிறேன். அவரை விட எனக்கு அனுபவம் உண்டு' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், 'புறாக்கூடு தலைவன்' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த அவர், 'அவரைக் கண்டால் பெண்களெல்லாம் பயந்து ஓடுகின்றனர். அவர் சிந்துவிடம் பேசிய உரையாடல் எல்லாம் என்னிடம் இருக்கிறது. நான் யாருக்கும் பயப்படமாட்டேன். ஈரோடு கிழக்கு தொகுதி எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும்’ என்ற அவர் அங்குள்ள திரையரங்குகளின் பெயர்களை பட்டியலிட்டுவிட்டு, அந்த தொகுதிகளின் வீதிகளில் இறங்கி அதிமுகவுக்கும் பழனிசாமிக்கும் எதிராக பிரசாரம் செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னருக்கு அஞ்சல் தலை வெளியிடுக - அப்துல்லா எம்.பி. கோரிக்கை