சென்னை: அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், மனுதாக்கல் செய்திருந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவைப்பட்டியலிடும்படி, கூடுதல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் அந்த கூடுதல் மனு வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 22) அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு வழக்கில் தன் தரப்பு வாதத்தை கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கூடிய கேவியட் மனு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனுவுடன், ஓ.பன்னீர்செல்வத்தின் கேவியட் மனுவும் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமையன்று எடப்பாடி பழனிசாமி மனு ஏற்கப்படும்பட்சத்தில், அடுத்த ஓரிரு நாள்களில் அவரது பிரதான மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
இதையும் படிங்க: வாங்க...வாங்க...சசிகலா, டிடிவி தினகரன், ஈபிஎஸ் உள்ளிட்டோருக்கு ஓபிஎஸ் அழைப்பு...