சென்னை தண்டையார்பேட்டை கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளரான ராதாகிருஷ்ணனுக்கு கோகுல் என்ற மகன் உள்ளார். கேளம்பாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் பி.ஏ. எல்.எல்.பி. படித்துவந்த கோகுல், நேற்று இரவு ராயபுரத்தில் உள்ள தனது நண்பரின் பிறந்தநாள் விருந்தில் கலந்துகொண்டுள்ளார்.
அதையடுத்து இரவு 12.45 மணியளவில் கோகுல், அவரது நண்பர் யோக பிரகாஷ் இருவரும் இருசக்கர வாகனத்தில் எண்ணூர் விரைவு சாலையில் எண்ணூர் சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை யோக பிரகாஷ் ஓட்டியுள்ளார்.
மோட்டார் சைக்கிள் திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மாணவர்கள் வந்த இருசக்கர வானத்தின் மீது மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த கோகுல், அதே இடத்தில் உயிரிழந்தார்.
அவரது நண்பர் யோக பிரகாஷ் கை கால் உடைந்த நிலையில் பலத்த காயங்களுடன் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மகேந்திரன் (29) என்பவரை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு! சிசிடிவி காட்சிகள்!