சென்னை ஆவடியை அடுத்த சேக்காடு, அண்ணாநகரில் வசித்துவந்தவர் ராஜேஸ்வரி (62). இவரது கணவர் சுப்ரமணி இறந்த பின்பு, ராஜேஷ்வரி தனியாக வசித்துவந்தார். ராஜேஸ்வரியின் மகன் முருகன் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி, குளித்த பின்பு வீட்டின் முன்பாக உட்கார்ந்து தலை வாரி கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டின் மேற்கரை இடிந்து விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேற்கூரை இடிந்து விழுந்து சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த ராஜேஸ்வரி உடலை மீட்க போராடினர். இதையடுத்து ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர், அவரது உடலை மீட்டனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பட்டாபிராம் போலீஸார், ராஜேஸ்வரி உடலை உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனிடையே விபத்து குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், ராஜேஸ்வரியின் வீடு கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதேபோல் வீட்டின் நுழைவு வாயிலின் மேற்புறம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழுதுபார்க்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது விபத்து நிகழ்ந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.