சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கன மழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.
அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் மண்டபம் பகுதியில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை, டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையில் அடுத்து இரண்டு தினங்களுக்கு மழை தொடரும்" என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் அதிகாலை முதல் கனமழை!