திங்கட்கிழமை சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் போக்குவரத்துத் துறை தொடர்பாக பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், ' சென்னை மெட்ரோ ரயிலின் முதல் வழித்தடத்தை விம்கோ நகர் வரை விரிவுபடுத்தும் பணி இந்த ஆண்டு மத்தியில் நிறைவடையும் ' என்றார். சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணியில், ' 69 ஆயிரத்து 180 கோடி ரூபாய் செலவில், 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மூன்று வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்க அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதில் 52 கிலோ மீட்டர் தொலைவுக்கு நிதி அளிக்க ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு நிறுவனமான ஜிகா முன்வந்துள்ளதாகவும் ' தெரிவித்தார்.
மேலும், இதில் முதல்கட்ட கடனுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும், ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் உதவியுடன் மீதமுள்ள பாதைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய ஆளுநர், இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கவும், நிதி அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மெட்ரோ ரயில் சேவையை விமான நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் வரையிலான 15.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னையில் உள்ள பல்வேறு போக்குவரத்து முறைகள் ஒன்றிணைத்து, ஒருங்கிணைந்த சென்னைப் பெருநகர போக்குவரத்து ஆணையரகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உலக வங்கியுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாம்பரம்- வேளச்சேரி மார்க்கத்தில் உள்ள போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் 15.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து அமைக்கப்படும் என்றும்; இதற்கான சாத்தியக்கூறுகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கும் என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் அல்லது இலகு ரக ரயில் (லைட் ரயில்) அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே பறக்கும் ரயில் சேவையை வேளச்சேரி முதல் ஆலந்தூர் வரை நீட்டிக்கும் பணி கடந்த 13 ஆண்டுகளாக நிறைவடையாமல் உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கு காரணமாக இந்தப் பணி முடிக்கப்படாமல் உள்ளநிலையில், தற்போது, புறநகர் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் ஆலந்தூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதால், பறக்கும் ரயில் வழித்தடத்தை சென்னை கடற்கரை முதல் ஆலந்தூர் வரை இணைக்கப்பட்டால், ஆலந்தூர் ரயில் நிலையம் முக்கிய இணைப்பு ரயில் நிலையமாக மாறும்.
இதனால், கடற்கரை - ஆலந்தூர் வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை உயரும் எனவும், பல்வேறு பகுதி மக்களும், வெளியூருக்குச் சென்று வருபவர்களும் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி எளிதாக பயணிக்க முடியும் என்பதாலும் இதனை செயல்படுத்த தற்போது திட்டங்களை ஒதுக்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
ஆனால், வெறும் 500 மீட்டர் தூரத்துக்குப் பணி நிறைவடையாமல் உள்ள வழித்தடத்தை தமிழ்நாடு அரசு புதிய ரயில் தடம் அமைக்க திட்டமிட்டுள்ளது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு விதை விதைத்தது திமுகதான் - விஜயபாஸ்கர்