சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்விக்கான கட்டணங்களுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் விதிமுறைகளை மாற்றி அமைத்து அறிவித்துள்ளது.
இந்தியாவில் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வு தகுதியின் அடிப்படையில் தான் சேர்க்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் வசூல் செய்வதுபோல், பல மடங்கு கட்டணம் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது.
![தனியார் மருத்துவக் கல்லூரியில் 50 சதவீதம் இடங்களுக்கு அரசு கட்டணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14398828_s.jpg)
மேலும் மத்திய அரசு நீட் தேர்வினால் மாணவர்களின் பொருளாதாரப் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது எனவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணக் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வந்தது.
ஆனால், ஏழை மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டணம் செலுத்திப் படிக்க முடியதா நிலையே நீடித்து வந்தது.
கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்
இந்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிட்டுள்ள கட்டணத் திருத்தம் குறித்த அறிக்கையில், 'தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 விழுக்காடு இடங்களுக்குச் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.
இந்தக் கட்டணச்சலுகை அரசு ஒதுக்கீட்டின்கீழ் இடம் பெற்ற மாணவர்களுக்கும் அளிக்கப்படும்.
அரசு ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தால் அந்த கட்டணச் சலுகை மற்ற மாணவர்களுக்குத் தகுதி அடிப்படையில் வழங்கப்படும். அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பு இடத்தைப் பெற்ற மாணவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும்.
![தனியார் மருத்துவக் கல்லூரியில் 50 சதவீதம் இடங்களுக்கு அரசு கட்டணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14398828_m.jpg)
கேபிடேஷன் கட்டணம் வசூலிக்கக் கூடாது
சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக்கல்லூரியில் அதிகபட்சமாக 50 விழுக்காடு மாணவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரிக்கு இணையான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்' எனத் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
![தனியார் மருத்துவக் கல்லூரியில் 50 சதவீதம் இடங்களுக்கு அரசு கட்டணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14398828_n.jpeg)
எந்த மருத்துவக் கல்லூரியும் கேபிடேஷன் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி லாபத்திற்கானது அல்ல என்ற கொள்கை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
கல்லூரி நடத்துவதற்கான செலவுகள், கல்விக் கட்டணத்தில் சேர்க்கப்படலாம்; அதே நேரம் அளவுக்கு அதிகமான செலவுகள், அதிக லாபம் போன்றவை கல்விக் கட்டணத்தில் சேர்க்கக்கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் கட்டணம் நிர்ணயம்செய்வதற்கான வழிமுறைகளையும் அதில் தெரிவித்துள்ளது.