தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சென்னை சிம்சனிலுள்ள அவரின் உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, இது மதசார்பற்றது என அம்பேத்கர் கூறினார். ஆனாலும், அப்போதே அவர் அரசியல் சட்டம் எந்தளவுக்கு மதசார்பற்றது என்பதை ஆட்சிக்கு வருபவர்களைப் பொருத்துதான் அமையும் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தார்.
அவரின் கூற்றுபடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக, மோடி அரசு அரசியல் சட்டத்திலுள்ள மதசார்பற்ற தன்மையின் ஒவ்வொரு தூணையும் தகர்த்தெறிந்துவருகிறார். அரசியலமைப்புச் சட்டம் 370ஐ ரத்து செய்தது, மகாராஷ்டிராவில் மக்கள் விரோதமாக நள்ளிரவில் ஜனாதிபதி ஆட்சியைக் கலைத்து அரசமைக்க அழைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததுடன், தேசிய மக்கள் பதிவேட்டினை கொண்டுவந்து சிறுபான்மை மக்களை பிளவுபடுத்தி மதசார்பின்மையை அழிக்க முயற்சிக்கிறது. பாஜக அரசு மராட்டியத்திலும், ஜார்கண்டிலும் ஆட்சியை இழந்துள்ளது. மக்கள் மதசார்பின்மைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் நடத்திய பேரணி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. அதனைப் பொறுக்க முடியாத பொறாமை உள்ளம் கொண்டவர்கள்தான் குறை கூறுவார்கள். ஹிட்லர் ஆட்சியில் கோயரிங்கும் கோயபெல்ஸ்ஸும் பொய் கூறியது போல் மோடியும் அமித் ஷாவும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொய் கூறிவருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: ‘கிறிஸ்துமஸ் குடிலிலும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு’ - தூத்துக்குடி தம்பதியின் புரட்சிகர குடில்!