சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் நிறைவடைந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்ற மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றவேண்டும் என கடந்த கூட்டத்தொடரில் திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தொடரிலும் அதனை வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப்போல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்ததச் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம். அதனை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். டெல்லியைப் போல் தற்போது தமிழ்நாட்டு மக்களும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவற்றை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
அவ்வாறு வண்ணாரப்பேட்டையில், அறவழியில் போராடிய மக்கள் மீது தடியடி நடத்த காவல்துறையை தூண்டியது யார்? தடியடி நடத்தியதன் காரணமாக அங்கு வன்முறை சம்பவம் ஏற்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு முதலமைச்சரோ அமைச்சர்களோ சென்று பார்த்திருக்கவேண்டும்.
போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்தது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும். மேலும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும்" என்றார்.
தொடரந்து பேசிய அவர், " குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்திய கையெழுத்து இயக்கத்தில் பெற்ற இரண்டு கோடி கையெழுத்துகள் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருகின்ற 19ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து அந்த கையெழுத்துகளை வழங்க இருக்கிறார்கள்.
வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்பை மட்டும் தமிழ்நாட்டில் நடத்தவேண்டும். பெற்றோருடைய பிறந்த தேதி, பிறந்த ஊர் ஆகியவற்றை கணக்கெடுப்பின்போது கேட்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பாகவும் இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், "சட்டபேரவை விதி 173-ஐ சுட்டிக்காட்டி, கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்ட பொருளை மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது" என்றார்.
இதையும் படிங்க: 'இனி சத்துணவுத் திட்டம், மக்கள் திலகத்தின் சத்துணவுத் திட்டமாக இருக்காது' - வைகோ கண்டனம்