சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரஷ்ணேவ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "திரைத்துறையில் தயாரிக்கப்படும் படங்களை பொதுமக்கள் பார்வைக்கு திரையிடப்படுவதற்கு முன்பு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ்கள் வழங்கபடுகிறது.
அனைத்து வயதினரும் கண்டுகளிக்க கூடிய படங்களுக்கு யு (U) சான்றும், வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படங்களுக்கு ஏ (A) சான்றும், 12 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலின்படி காணக்கூடிய படங்களுக்கு யுஏ (U/A) சான்றும், வரையறுக்கப்பட்ட பார்வையாளர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படங்களுக்கு எஸ் (S) சான்றும் வழங்கப்படுகிறது.
ஆனால், பல திரையரங்குகளில் வயது வந்தவர்களுக்கு மட்டுமே பார்பதற்கான ஏ (A) சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை காண சிறுவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அனுமதிக்கக் கூடாது என திரையரங்கங்களுக்கு மத்திய திரைப்பட வாரியம் அறிவுறுத்தி உள்ளது. அதை மீறி அனுமதிப்பது திரையிடுதல் சட்டத்தின்கீழ் குற்றமாகும்.
எனவே மத்திய தணிக்கை வாரியத்தின் வழிகாட்டுதல்களை திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கண்டிப்பாக கடைபிடிக்கும் படி உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக தணிக்கை வாரியம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கார்ட்டூன் படங்களைக் கூட 7 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்க கூடாது என்று விதி உள்ளது. ஆனால், இப்போதெல்லாம் வீடுகளில் சிறு குழந்தைகளும் பார்க்கிறார்கள் என்று வாதிட்டார்.
அதன்பின் நீதிபதிகள், திரையரங்கில் புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் 3 மாதங்களுக்குள் தொலைக்காட்சிகளில் வெளியாகிவிடும் என்ற நிலையில், இதை எப்படி தடுக்க முடியும். இது நடைமுறையில் சாத்தயமில்லை எனத் தெரிவித்தனர். அதோடு மனுதாரரின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.