சென்னை: தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் அறிவுறுத்திய வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று (ஜன.3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வாகனங்களிலும், நம்பர் ப்ளேட்களிலும் தேசிய சின்னங்களை தவறாக பயன்படுத்துவது தேசிய சின்னங்கள் பாதுகாப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரியது என்பதால் உரிய வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அபராதம், வழக்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தவறான வண்ணங்களிலான விளக்குகளை பயன்படுத்தியதாக 4 ஆயிரத்து 456 வழக்குகள், கறுப்பு ஸ்டிக்கர்கள் தொடர்பாக 4 ஆயிரத்து 697 வழக்குகள், தவறான நம்பர் பிளேட் தொடர்பாக 1 லட்சத்து 55 ஆயிரத்து 331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது குறுக்கிட்டு நீதிபதி, தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தபட்டதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் இல்லை எனச் சுட்டிக்காட்டி, குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது என்றும், வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.
காவல்துறை தரப்பில், வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்களிடமிருந்து இதுபோன்ற புகார்கள் வரவில்லை என்றும், அப்படி வராதபோது உயர்அலுவலர் தாமாக முன்வந்து வழக்குப்பதிய முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது அரசு வழக்கறிஞர், வங்கி மற்றும் காப்பீட்டுத்துறை ஊழியர்கள், மத்திய அரசின் முத்திரயை பயன்படுத்துகின்றனர் என்றும், இதற்கு தடை விதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, அதற்காகத்தான் கான்ஸ்டபிள் தவறுகளை கண்டறிந்தால் கூட உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் நாட்டில் உள்ள அனைவரும் சமமாக நடத்தப்படுகின்றனரா? என்பதை மக்கள் பார்பார்கள். குற்றவாளிகளும் இதுபோன்ற சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தி நடவடிக்கையிலிருந்து தப்பிவிடுகின்றனர் என்று வேதனை தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் நாளை மறுதினம் (ஜன.5) உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: எழுவர் விடுதலைக்கு ஆளுநரிடம் மீண்டும் அழுத்தம் தரப்படும்- அமைச்சர் ரகுபதி பேட்டி