சென்னை: திருநின்றவூரில் பச்சையப்பன் என்பவர் புதிதாக வீடு கட்டிவருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பச்சையப்பன் வீட்டில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துகிடந்தார். மேலும், அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு அலங்கோலமாக இருந்தார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
இதனைக் கண்ட கட்டடத் தொழிலாளிகள் பச்சையப்பனுக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, அவர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தார். இது குறித்து, பச்சையப்பன் திருநின்றவூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர்.
இதன் பிறகு, காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில், சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தது, திருநின்றவூர், நத்தம்பேடு, அண்ணா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் அழகேசன் என்பவரது மனைவி என்பது தெரியவந்தது. இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மேலும், இவர் தினமும் வீட்டை விட்டு வெளியே சென்று சுற்றிவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஜனவரி 30 அன்று இரவு முதல் இவர் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து உறவினர்கள் அவரைப் பல்வேறு இடங்களில் தேடிவந்துள்ளனர். இருந்த போதிலும் அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
சிசிடிவி கேமராவில் சிக்கிய கொலைகாரன்
இதற்கிடையில், இவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. மேலும், அவரது இறப்பில் காவல் துறையினருக்குச் சந்தேகமும் ஏற்பட்டது. இதனையடுத்து, காவல் துறையினர் சடலத்தைப் உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப் வைத்தனர். மேலும், காவல் துறையினர் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வுசெய்தனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள கேமராவில் இவரை திருநின்றவூர், நடுக்குத்தகை, பாடசாலைத் தெருவைச் சேர்ந்த சக்திவேல் (32) என்ற கூலித்தொழிலாளி இழுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் துறையினர் நத்தம்பேடு பகுதியில் தலைமறைவாக இருந்த சக்திவேலைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், பட்டப்பகலில் இந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பச்சையப்பன் வீட்டுக்கு சக்திவேல் இழுத்துச் சென்றுள்ளார். பின்னர், அவரை வலுகட்டாயமாக சக்திவேல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். பின்னர், அவரை சக்திவேல் கொலை செய்துள்ளது தெரியவந்தது. கொலைக்கான தடயங்களை மறைக்க ரத்தக் கறைகளை தண்ணீர் ஊற்றி அழித்துள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு பதிவுசெய்து சக்திவேலை கைதுசெய்தனர். மேலும், அவர் வேறு ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளாரா எனக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மனநிலை பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி படுகொலைசெய்த சம்பவம் திருநின்றவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பிரதமர் குறித்து அவதூறு - நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை