சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சுயநிதி மருத்துவக் கல்லூரி, தனியார் பல்கலைக்கழகத்திற்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கான கட்டணங்களை தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதியரசர் வெங்கட்ராமன் செயல்பட்டு வருகிறார்.
இந்தக்குழு தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான கட்டணங்களை நிர்யணம் செய்து அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 18 தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 4 லட்சத்து 35 ஆயிரம் முதல் 4 லட்சத்து 50 ஆயிரம் வரையிலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 லட்சத்து 50 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கட்டணமாக 24.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது கட்டண நிர்ணயக் குழு நிர்ணயத்துள்ள கட்டணம் என்பது சிறப்பு கட்டணம், சேர்க்கை கட்டணம், கல்விகட்டணம், விளையாட்டு கட்டணம், ஆய்வக கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு பொருந்தும். இந்தக் கட்டணங்களை தவிர்த்து மாணவர் வளர்ச்சி நிதியாக 40 ஆயிரம் வசூலித்துக்கொள்ளவும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், உணவு கட்டணம் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டணத்தில் அடங்காது. அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு குழு காப்பீட்டு முறையை ஏற்படுத்தி தர வேண்டும். இதனால் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக கட்டணத்தை மாணவர்கள் செலுத்த நேரிடும்.
நடப்பாண்டில் புதியதாக சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை(தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சமயபுரம்), ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செங்குன்றம் ஆகியவற்றில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு (எம்பிபிஎஸ்) அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 16 லட்சத்து 20 ஆயிரம், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாரிசுக்கான ஒதுக்கீட்டிற்கு 29 லட்சத்து 40 ஆயிரம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்தால், அங்கீகாரத்தை திரும்ப பெறுவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்திற்கு பரிந்துரைச்செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 13 வயது சிறுமியை திருமணம் செய்த தீட்சிதர் கைது - இதர தீட்சிதர்கள் போராட்டம்