அக்கட்சியின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'தோஹாவில் நடைபெறும் 23ஆவது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப்பந்தயத்தில் திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றிருக்கிறார். இப்போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கம் கோமதியின் மூலமாகவே கிடைத்திருக்கிறது. இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்த சகோதரி கோமதி மாரிமுத்துவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
மிக எளிமையான விவசாய குடும்பச் சூழலில் பிறந்த கோமதி மாரிமுத்து அவர்கள், அண்மையில் தந்தையை புற்றுநோய்க்கு பறிகொடுத்து, பயிற்சியாளரை இதய நோயில் இழந்தார். ஒரு விபத்தில் தானும் காயமுற்று இரண்டாண்டுகள் பயிற்சி எடுக்க முடியாமல் பரிதவித்தார். இவ்வளவு இடையூறுகளுக்கு மத்தியில் தங்கம் வென்றது அவருடைய விடா முயற்சியாலும், துணிச்சலாலும் தான். அவர் மென்மேலும் பதக்கங்களை குவித்து இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகிறது.
தமிழக அரசும், மத்திய அரசின் விளையாட்டுத்துறையும் கோமதிக்கும், அவரைப்போன்ற மற்றவர்களுக்கும் அனைத்து விதங்களிலும் ஆக்கமும், ஊக்கமும், பயிற்சியும் அளித்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் புகழ் சேர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.