சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சுப்ரமணியன். இவர் கடந்த 2016ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மூத்த விஞ்ஞானிக்கான விருதுக்காக, கடந்த 2017ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அதில் அவருக்கு விருது வழங்கப்படாத நிலையில், தனது அசல் சான்றிதழ்களை திரும்ப அளிக்கக்கோரி சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் அதன் மீது எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே தமது அசல் சான்றிதழ்களை திரும்ப அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த மனு இன்று (டிச.23) உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில், ‘மனுதாரரின் அசல் சான்றிதழ்களை பதிவாளர் அலுவலகம் பெறவில்லை’ என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, “நீதிமன்ற உத்தரவின்படி மனுதாரரின் விண்ணப்பம் மற்றும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட்ட நிலையில், அசல் சான்றிதழ்கள் மட்டும் தங்களுக்கு கிடைக்க பெறவில்லை என பதிவாளர் கூறுவதை ஏற்க முடியாது.
எனவே மனுதாரரின் அசல் சான்றிதழ்களை 8 வாரங்களில் சென்னை பல்கலைக்கழகம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழ்கள் இல்லையெனில், மனுதாரருக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிடப்படுகிறது.
அசல் சான்றிதழ்களை காணாமல் போயிருந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றிதழ் காணமல் போனதற்கு காரணமானவர்களிடமிருந்து மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டிய 10 லட்சம் ரூபாய் தொகையை வசூலிக்க வேண்டும். மேலும் மனுதாரருக்கு வழக்குச் செலவாக 10,000 ரூபாயை வழங்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தல் முடிவை அறிவிக்க நீதிமன்றம் உத்தரவு