சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 2010 - 2011ஆம் ஆண்டுகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு, மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உதவிப் பேராசிரியர்களுக்கான பணியை செய்து வரும் தற்காலிக ஆசிரியர்கள், பணி வரன்முறை செய்யக் கோரியும், ஏற்கனவே நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல், புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என கூறியதுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு மாறாக, தற்போது ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, அண்ணா பல்கலைக்கழகம், கடந்த ஆகஸ்டில் அறிவிப்பாணை வெளியிட்டதாகவும், அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும் நீதிபதிகளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
மேலும், நிர்வாக காரணங்களுக்காக தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் முன்வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரே காரணத்துக்காக 10 முதல் 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருவதாகவும், நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல் இந்த கல்வி நிறுவனங்களை செயல்பட அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.
அதேநேரம், நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன? 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய தயங்குவது ஏன்? நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க ஏன் நேரடி தேர்வு நடத்த முடியாது என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் இந்த கேள்விகளுக்குப் பதிலளித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்து உள்ளனர்.
இதையும் படிங்க: "சனாதனம் இந்துக்களின் நித்தியக் கடமை.. கருத்து சுதந்திரத்தை கொண்டு காயப்படுத்தாதீர்கள்" - சென்னை உயர்நீதிமன்றம்!