தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி, வேலூர் விழுப்புரம் உள்பட ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் வருகிற 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 288 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 385 கிராம ஊராட்சி மன்றத் தலைவர், மூன்றாயிரத்து 597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு இன்று காலை வேட்பு மனுக்கள் தரப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் முதல்கட்டமாக எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 27ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியபட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 30ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் இம்மாதம் 27ஆம் தேதி தருமபுரி, அரூர், கடத்தூர், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாக்களிலும் 30ஆம் தேதி ஏரியூர், காரிமங்கலம், மொரப்பூர், பாலக்கோடு, பென்னாகரம் தாலுகாக்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 2811 உள்ளாட்சி இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனு விண்ணப்பங்கள் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றிய அலுவலகங்களில் விநியோகிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் ஒரு ரூபாய் செலுத்தி வேட்பாளர்கள் பெற்றுச் செல்கின்றனர். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முதல் நாள் என்பதால் வேட்புமனு விண்ணப்பங்கள் வாங்க ஒரு சிலரே வந்திருந்தனர்.
அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தங்களது கூட்டணி கட்சிகள் போட்டியிடும் ஊராட்சி ஒன்றிய பதவிகள் முடிவு செய்யப்படாத காரணத்தால் அரசியல் கட்சி உறுப்பினர்கள் வேட்புமனு விண்ணப்பங்கள் வாங்க வரவில்லை. ஒரு சில சுயேச்சைகள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2295 கிராம பஞ்சாயத்து, 265 பஞ்சாயத்து தலைவர், 17 மாவட்ட வார்டுகளுக்கான 170 வார்டு உறுப்பினர்கள், 13 பஞ்சாயத்து யூனியன் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக வருகிற 27ஆம் தேதியும் அவினாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2ஆவது கட்டமாக வருகிற 30ஆம் தேதியும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது.
17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள், இரண்டாயிரத்து 295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தேர்தல் நடக்கிறது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய நான்கு ஒன்றியங்களில் வேட்புமனு விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கியது. மாவட்டத்திலிருந்து பல்வேறு கிராமங்களிலிருந்து வேட்பு மனு விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். இதற்காக நான்கு ஒன்றியங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
இதையும் படிங்க: சசிகலாவை விடுதலை செய்யக்கோரி நடுரோட்டில் வீச்சரிவாளுடன் இளைஞர் ரகளை