TASMAC: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பேசிய பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி, "இந்த ஆண்டு முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நல்லாட்சிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது. கரோனோ காலத்தில் மெகா தடுப்பூசி முகாம் அமைத்து மக்களைக் காப்பாற்றிவரும் முதலமைச்சரை பாமக சார்பில் வரவேற்கிறேன்.
கரோனா மூன்றாவது அலையின் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு, மேலும் 1 முதல் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை போன்ற நல்ல முயற்சியினை பாமக சார்பில் வரவேற்கிறோம். அத்தோடு மட்டுமில்லாமல் கரோனா பெருந்தொற்று காலத்தில் மதுக்கடைகளை மூடவும் பாமக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
நீட் தேர்வு
போதைப்பொருள் விற்பனையை முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்க வேண்டும். நீட் தேர்வை எதிர்ப்பதில் அரசு உறுதியாக உள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கரோனா கால நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டுமென்று மருத்துவர் ராமதாஸ் அறிக்கையை வெளியிட்டிருந்தார். தற்போது முதலமைச்சரும் வரும் 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று 110 விதியின்கீழ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகம் துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசே நியமனம் செய்வதற்கான உரிமையைப் பெருவதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்" என்றார்.
துணைவேந்தர் நியமனம்
அதற்குப் பதிலளித்துப் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திலும் இந்த நிலையே உள்ளது. துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் பங்கும் இருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும் என்று சொன்னால், பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமித்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு என்பதே சிறப்பாக இருக்கும். மு.க. ஸ்டாலின் இது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்" என்றார்.
அப்போது பேசிய மு.க. ஸ்டாலின், "வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்படும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யோகா கற்பவர்களின் ஆரம்ப கால தவறுகள்!