கோயம்பேடு காளியம்மன் கோயில் தெருவில் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவரை எட்டு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது அந்த இளைஞர் கூச்சலிட்டதால், உடனடியாக அருகில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் அந்த கும்பலை மடக்கிப் பிடித்து கோயம்பேடு திறந்த பேருந்து நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடத்தப்பட்ட இளைஞர் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, நாவல்பூர் புது தெருவைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் (26) என்பது தெரியவந்தது. மேலும், காயமடைந்த விஷ்ணு பிரசாத் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணம் பெற்றுள்ளதும், அவர்களுக்கு வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பி தராமல் தலைமறைவாக இருந்துவந்துள்ளார். இந்த நிலையில், அவர், நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகே சென்றபோது பணம் கொடுத்து ஏமாந்தவர்களான அரவிந்த், ஜானகிராமன், பாபுஜி உள்ளிட்ட எட்டு பேர் கடத்தி சென்று கோயம்பேட்டில் உள்ள தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் அடைத்து வைத்து சரமாரியாக அடித்து உதைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், அவர்கள் பின்னர் விஷ்ணு பிரசாத்தின் தந்தை சம்பந்தத்திற்கு செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு, பணத்தை திருப்பி கொடுத்தால், மகனை ஒப்படைத்து விடுவதாகவும் கூறியுள்ளனர். பணத்தகராறில் இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் கோயம்பேட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி - சென்னையில் துணிகர சம்பவம்!