சமீபத்தில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் பாகுபாடின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
அவரின் உடல் வேலாங்காடு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தகனம் செய்வதற்கு முன்னர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இறுதி மரியாதை செலுத்தினார். அப்போது அங்கிருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண் கலங்கினார். அவருக்கு ஆறுதல் கூறிய வீரமணி இன்று அறிக்கை வெளியிட்டு, திமுக என்ற இயக்கத்தைக் கட்டிக்காப்பார் எனக் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”80 ஆண்டு பொதுவாழ்க்கை கண்ட இனமானப் பேராசிரியர் எதையும் பெரிதாக எதிர்பார்க்காது, ‘‘தம் கடன் பணி செய்து, தொண்டாற்றுவதே’’ என்பதையே தனது 80 ஆண்டுகால பொதுவாழ்வின் இலக்கணமாக அவரே வகுத்துக் கொண்டு, அதன்படி நடந்து காட்டிய இலக்கியமாகவே என்றும் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் லட்சிய முழக்கங்களை 50 ஆண்டுகளாக திமுக என்ற அரசியல் கட்சியை கொள்கை எதிரிகளும், அதிர்ச்சியூட்டக் கூடிய வகையில், ஆற்றலோடு வழிநடத்தி வருகிறார் ஸ்டாலின்.
அவர் இந்தியத் துணைக் கண்டத்தையே திரும்பிப் பார்க்க வைத்து, திக்கெட்டும் பாயும் கொள்கை வேங்கையாய் செயல்பட்டு வருகிறார். தனது இயக்கத்தின் மூத்தத் தலைவர் மறைந்த பின் அவரது உடலைப் பெறுவதில் தொடங்கி, அடக்க நிகழ்ச்சிவரை ஸ்டாலினின் ஈடு இணையற்ற செயல்திறன் அபரிமிதமானது.
அவர் தலைமையில் புதிய அத்தியாயம் தொடங்கி, கொள்கைப் பகைகள் முடங்கும். சவால்கள் பல அதிகார பலத்தோடு தோள்தட்டும் நேரம் இது. அவற்றை திராவிட இயக்கம் ஸ்டாலின் தலைமையில் முறியடிக்கும். பலமுடன் பயணம் தொடங்கும். பகைக்கூட்டம் முடங்கும். அவருக்குத் தாய்க்கழக்கத்தின் ஆதரவும், வாழ்த்தும் உண்டு ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பெறப்போகும் வெற்றி மலர்களைக் காணிக்கையாக்குவோம்' - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!