சென்னை சித்தாந்திரிப்பேட்டையில் இந்து முன்னணி அமைப்பாளர் பக்தவத்சலம் மற்றும் மூத்த தலைவர் ராமகோபாலன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், ”அக்டோபர் 2ஆம் தேதி நாடு முழுவதும் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தெய்வீக தமிழை காத்து, போலி தமிழின வாதத்தை முறியடிப்போம் என்ற ஸ்லோகனோடு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேலான சிலைகளும் சென்னையில் மட்டும் 5,501 சிலைகள் வைத்தும் வழிபட இருக்கிறோம். தெய்வீக தமிழை 1500 வருடங்களுக்கு முன்பே நாயன்மார்கள்தான் வளர்த்தார்கள். ஆனால், தற்போது பலரும் நாங்கள்தான் தமிழை வளர்த்தோம் என சூளுரைக்கின்றனர். முதலில் சாமியே இல்லை என்றார்கள், இப்போது தமிழ் கடவுள், தெலுங்கு கடவுள் என்று ஆரம்பிக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் நடத்தப்பட வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசும், காவல்துறையும் மிகுந்த ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர்” என்றார்.