தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். சமீப காலமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக சமுதாயத்தின் நிலையும் உள்ளது. தங்கள் பகுதியில் இருக்கும் மாணவர்கள் தரமான கல்வியை பெறும் போது தனது குழந்தையும் தரமான கல்வியை கற்க வேண்டும் என பெற்றோர்கள் கருதுகின்றனர்.
சிறப்பாக செயல்படும் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களை அதிகளவில் பெற்றோர்கள் சேர்த்து வருகின்றனர். மேலும் அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஆங்கில வழி வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டப் பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாகவே உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தொடக்கக் கல்வித்துறையும், பள்ளிக்கல்வித்துறையும் தொடர்ந்து மாணவர்களைச் சேர்க்க வேண்டும் எனக் கூறினாலும், 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் மாணவர்களைச் சேருங்கள் என ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.
ஆனாலும் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில் சில ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். தற்போது சுமார் 400க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 5 மாணவர்களுக்கு குறைவாகவே இருக்கின்றனர். எனவே தற்போது நடந்தக் கலந்தாய்வின் போது தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணி மாறுதல் பெற்றால், இடைநிலை ஆசிரியர் மூலம் நடத்தத் தொடக்கக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே தொடக்கப் பள்ளிகள் அருகில் உள்ள உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இடைநிலை ஆசிரியர் மட்டும் 5 மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும். அந்த இடைநிலை ஆசிரியர் விடுமுறை எடுத்தால் வேறு மாற்று ஆசிரியரை நியமிக்கவும் தலைமை ஆசிரியருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
ஆனாலும் மாணவர்களே இல்லாத பள்ளியில் வேலையில்லாமல் பணியில் இருந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களை வேறுப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் சுமார் 20 இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்தப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஊர்மக்கள் முடிவு செய்து வருகை புரிந்தால் உடனடியாக பள்ளி திறந்து மீண்டும் செயல்படுத்தப்படும். பள்ளியை எந்தக் காரணம் கொண்டும் அரசு மூடாது என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறையின் புதிய ஆணையருக்கு அதிகாரம் அளிக்கத் திட்டம்!