கோவையைச் சேர்ந்த வழக்குரைஞர் பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் மீதான தீண்டாமையை தடுப்பதற்காக கடந்த 1989 ஆம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்ட வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ், மாநில அளவில் ஆண்டுக்கு இரு முறையும், மாவட்ட அளவில் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் கண்காணிப்பு குழுவைக்கூட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு அளிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசித்து மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டில் அதுபோன்ற கண்காணிப்பு குழுக் கூட்டங்கள் நீண்ட ஆண்டுகளாக நடத்தப்படவில்லை, குறிப்பாக, இந்த ஊரடங்கு காலகட்டத்தில் கொலை,ஆணவக் கொலை, சாதி ரீதியிலான அடக்குமுறை போன்றவற்றால் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கு கடந்த ஜூன் மாதம் மனு அளித்ததாகவும், அதனால் நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி மாநில, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவை கூட்ட உத்தரவிட வேண்டும் என, கோரி தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு குறித்து தமிழ்நாடு அரசை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.