இது குறித்து சென்னை ஐஐடி வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் 50 விழுக்காடு தாங்கள் விரும்பும் பாடங்களைத் தேர்வு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் உள்ள 16 துறைகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து சுமார் எட்டு படிப்புகளை தேர்வு செய்யலாம்.
இந்திய வரலாறு, உளவியல், பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற மாறுபட்ட படிப்புகளை தேர்வு செய்து 72 கிரிடெட்டுகளை பெறலாம்.
இது போன்ற சலுகைகள் வேறு ஐஐடிகளில் அளிக்கப்படவில்லை. மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் கிரிடெட் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
சென்னை ஐஐடியில் படிக்கும் ஆயிரத்து 300 மாணவர்களில் 25 முதல் 30 மாணவர்கள் மட்டுமே வேறுப் பாடப்பிரிவுகளை தேர்வு செய்கின்றனர்.
மேலும் டைனாமிகல் சிஸ்டம்ஸ் குறித்த புதிய பாடம் சேர்க்கப்பட்டு 200 மாணவர்கள் படிக்கின்றனர். மேலும் மாணவர்கள் ஒரு பருவத்தில் வெளி நாட்டில் உள்ள பல்கலைக் கழகத்திற்கு சென்று வருவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. எனவே மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் பி.டெக் படிக்கும் மாணவர்கள் எம்பிஏ பட்டம் பெற வேண்டும் என விரும்பினால் கூடுதாலாக ஒரு வருடம் படித்தால் அவர்களுக்கு பிடெக் மற்றும் எம்.பி.ஏ.பட்டம் வழங்கப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.