சென்னை: சட்டப்பேரவையில் கைத்தறி, துணிநூல், கதர்த்துறை, பத்திரப்பதிவு & வணிகவரித்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று பேச்சைத்தொடங்கிய அதிமுக எம்.எல்.ஏ. சேகர், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை "ஜல்லிக்கட்டு நாயகன்" என்று புகழ்ந்தார்.
இதில் குறுக்கிட்ட செய்தி & விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் 'எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறீர்கள் அவர் எத்தனை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளைகளை அடக்கினார்? என்று கேள்வி எழுப்பினார்.
உடனே எழுந்து பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் “நான் இளவயது காளையாக இருந்தபோது பெரியகுளத்தில் பல காளைகளை அடக்கியுள்ளேன். திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் இருந்தபோது "காளை"-யை விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அதிமுக ஆட்சியிலேயே சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்த வேண்டும் என்று அவசர சட்டம் நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி அது சட்டமான பின்னர் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் "ஜல் ஜல்" என்று நடத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.
அப்போது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை, “ஜல்லிக்கட்டுப் போட்டியை திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு தடை செய்யவில்லை பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றம் சென்றதால், நீதிமன்றம் தான் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதித்தது. மீண்டும் போட்டிகள் நடைபெற அதிமுக அரசு காரணமல்ல. மக்கள் போராட்டத்தால் தான் மீண்டும் போட்டிகள் சாத்தியமாகின” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அடுத்த இரண்டு ஆண்டுகளில் 316 துணை மின் நிலையங்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்