சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் குணசேகரன் (50). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர், குன்றத்தூர் பண்டார தெருவில் சொந்தமாக வீடு கட்டி, அதில் ஒரு பகுதியை அஜித் என்ற குடும்பத்தினருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக, அஜித் நான்கு மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. இந்நிலையில் நேற்றிரவு அஜித் பெற்றோர்களிடம் குணசேகரன் வாடகை கேட்டு கண்டித்துள்ளார்.
வெளியே சென்ற அஜித் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது பெற்றோர் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அஜித் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து குணசேகரனை குத்தினார்.
உயிரை காப்பாற்றிக் கொள்ள குணசேகரன் தெரு வழியே ஓடியுள்ளார். இருப்பினும், அவரை அஜித் விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக குணசேகரனை குத்தியதில் சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் குணசேகரன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினரிடம் அஜித் தான் மதுபோதையில் வீட்டின் உரிமையாளரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஊரடங்கு காலத்தில் வாடகைக்கு இருப்பவர்களிடம், அதன் உரிமையாளர்கள் வாடகை பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்று அரசும், நீதிமன்றமும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..
இதையும் படிங்க: ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!