சென்னை: நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்து பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு பிப்-1 முதல் 20-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆன்லைன் தேர்வுக்கான உரிய வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டு உரிய முறையில் தேர்வுகள் நடைபெறும். ஆன்லைன் தேர்வுகள் அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியாக நடத்தப்படும். இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடத்தப்படும்.
கல்வியின் தரத்தை உறுதி செய்யவே இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாக நடைபெறுகிறது. ஆன்லைன் தேர்வில் முறைகேடுகள் நடக்காத வண்ணம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான விடைத்தாள்கள் அப்லோட் செய்ய, மெயில் மூலம் அனுப்ப கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆஸ்கார் விருது பட்டியலுக்குத் தகுதிபெற்ற ஜெய்பீம்!