கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்டு இன்றியமையாத பணிகளை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்கள் தவிர்த்த பிற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
- மருந்து, மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் உற்பத்தி, அவற்றிற்குத் தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தியை மேற்கொள்ளும் தொழிற்சாலைகள்.
- தொடர்ச்சியாக செயல்பாட்டில் இருப்பது இன்றியமையாதது என்ற நிலையில் உள்ள தொழிற்சாலைகள். (continuous process industries).
- நிலக்கரி, கனிமங்கள் ஆகியவற்றின் உற்பத்தி, போக்குவரத்து, அவற்றிற்கு தேவையான வெடிபொருட்கள் மற்றும் இதர பொருட்களின் உற்பத்தி மற்றும் போக்குவரத்து,
- உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்,
- உணவு, மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்குத் தேவையான சிப்பங்களை (பேக்கேஜிங்) உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்,
- சாலை வழியே மாநிலங்களுக்கு இடையேயும், கப்பல்கள், விமானங்கள் மற்றும் ரயில்வே மூலமாகவும் மேற்கொள்ளப்படும் இன்றியமையாப் பொருட்களுக்கான சரக்கு போக்குவரத்து.
செயல்பாட்டில் உள்ள இன்றியமையாத் தொழிற்சாலைகள் அதன் பணியாளர்கள் மற்றும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்துக்கான அனுமதி சீட்டுக்களை வழங்குதல், பிற மாநிலங்களுக்கு செல்லக் கூடிய மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரக்கூடிய இன்றியமையா தொழிற்சாலைகளின் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்குதல் ஆகிய பணிகளை ஒருங்கிணைக்க மாநில அளவிலான சிறப்பு பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மருந்து, மருத்துவ உபகரணங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உற்பத்தி பணிகளை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 பெருந்தொற்று : சீனாவை மீண்டும் வம்பிழுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!