நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியை அடுத்த ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த மீராராணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சமீபத்தில் தமிழ்நாடு கடலோர பகுதியைத் தாக்கிய புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாகவும், அந்த நிவாரண உதவிகளை தகுதியில்லாத பலர், தங்கள் நிலங்களுக்கான ஆவணங்களை மோசடியாகப் பெற்று, 110 கோடி ரூபாய் வரை நிவாரண உதவியை பெற்றுள்ளனர்.
இம்மோசடி குறித்து புகார் தெரிவித்த பின், தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட 32 கோடி ரூபாய் திருப்பி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு உடந்தையாக இருந்த 80 அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மோசடி தொடர்பாக முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், மோசடியாக நிவாரண உதவியை பெற்றவர்களிடம் இருந்து தொகையைத் திரும்ப வசூலித்து, தகுதியானவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும், நிவாரண உதவி பெற்ற தகுதியில்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறித்தும் அறிக்கை தாக்கல் வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ’வெற்றி நடைபோடும் தமிழகம்’-க்கு செலவு ரூ.64 கோடி மட்டுமே என அரசு தகவல்!