சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா அலுவலகத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கேவாசன் இன்று (ஆக.7) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நாடு முழுவதும் இன்று (ஆக. 7) கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் உதவ முன் வர வேண்டும்.
வாக்களித்த மக்களுக்கு துரோகம்
திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. வருகின்ற 17ஆம் தேதி தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒன்றிய, மாநில அரசுகள், விளையாட்டு வீரர்களுக்கு தீவிர பயிற்சி அளித்து, மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற வழிவகை செய்ய வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். மக்களவைக் கூட்டத் தொடரை முடக்கும் உறுப்பினர்கள், அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
மேலும் மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடகா அரசு உச்சநீதிமன்றம் கூறியுள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அண்மையில் தஞ்சையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்தது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது” என்றார்.
இதையும் படிங்க: தேசிய நாயகன் நீரஜ் சோப்ரா- மு.க. ஸ்டாலின் புகழாரம்!