அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுதந்திர தின பாடல்கள், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் அரிய புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, காந்தியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தோடு கலந்துகொண்டனர். அப்போது பேசிய கே.எஸ். அழகிரி, “காங்கிரஸ் நாள்காட்டியில் இந்த நாளை விட மிக முக்கியமான நாள் ஒன்று இருக்க முடியாது. காந்தியை நினைவுகூறும் வகையில் உயரமான கொடிக்கம்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி தோன்றியதிலிருந்து, காப்பாற்றப்பட்டு வருவதற்கு அதன் கொள்கைகளே காரணம். நாடு தவறானவர்களின் கைகளில் போய்விட்டது. அதற்கான காரணம் நாம் உழைக்காமல் விட்டதுதான். காந்தி, காமராஜரை விட சாதனையாளர்கள் இந்திய நாட்டில் எவரும் இல்லை” என்று கூறினார்.