சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (59). இவர் அப்பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். இந்நிலையில், இவர் நேற்றைய முன்தினம் வீட்டில் இருந்தபோது அதே குடியிருப்பில் வசித்து வந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே பெற்றோரிடம் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இச்சம்பவம் குறித்து மடிப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தலைமறைவான அர்ச்சகர் சிவக்குமரைத் தேடிவந்தனர்.
பின்னர் அவர் இருக்கும் இடம் தெரிந்த காவல் துறையினர், கையும் களவுமாகப் பிடித்து அர்ச்சகரை கைது செய்தனர். பின்னர் மகளிர் காவல் துறையினர் விசாரணையில் சிறுமியிடம் தவறுதலாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து காவல் துறையினர் அர்ச்சகர் சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி கைது