திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் வசித்துவந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், முன்விரோதத்தின் காரணமாக உமா மகேஸ்வரியை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
கொலை குற்றவாளியான கார்த்திகேயன் திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் ஆவார். இந்நிலையில் கொலை நடந்த வீட்டிலிருந்து திருடப்பட்ட 25 சவரன் தங்க நகைகளை கார்த்திகேயனிடமிருந்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து கத்தி, ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் கே.கே. திரிபாதி நேற்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து சிபிசிஐடி அலுவலராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டு இன்று காலை நெல்லையில் விசாரணையை தொடங்கவுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரின் மகன் கார்த்திகேயன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.