சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் அளித்தோரிடம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைக் கழகத்தில் அதற்கான நேர்காணல் நேற்று (மார்ச்4) நடைபெற்றது.
அந்த நேர்காணலை அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களான துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், பாடநூல் வாரியத் தலைவர் பா. வளர்மதி, டாக்டர் தமிழ்மகன் உசேன், வேணுகோபால் ஆகியோர் இணைந்து நடத்தினர்.
அப்போது பேசிய அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், “2011ஆம் ஆண்டில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்று, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய தலைசிறந்த முதலமைச்சராக நிருபித்துகாட்டி ஆட்சி நடத்தினார். அதனால் ஆளும் கட்சியே மீண்டும் ஆளும் நிலையை உருவாக்கினார்.
அவரது மறைவுக்கு பின்னால் கடந்த 4 ஆண்டுக் காலம் ஜெ. ஜெயலலிதா செய்த சாதனைகள், சாதித்த திட்டங்கள், அவற்றில் எந்தவித சேதாரமும், தொய்வும் இல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். நமக்கு ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தத் தேர்தலிலும், நமது ஆட்சி குறித்து எந்தவொரு குறையும் சொல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கு விருப்ப மனு அளித்துள்ள அனைவருக்கும் தேர்தலில் போட்டியிடத் தகுதி உள்ளது. ஆனால், தொகுதிக்கு ஒருவர் தான் போட்டியிட முடியும். எனவே வாய்ப்பு வழங்கப்படாதவர்களுக்குத் தகுதி இல்லை என்ற அர்த்தம் இல்லை.

யார் வேட்பாளர் என்று தலைமை அறிவிக்கின்றதோ, அவருக்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பை தரவேண்டும். கருணாநிதி ஒரு தீய சக்தி, அந்த சக்தியை அரசியலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று உருவாக்கப்பட்டது தான் அதிமுக.
அன்றிலிருந்து இன்றுவரை திமுகவினர், அதிமுகவை அழித்திடவேண்டும் என்று ஒற்றை சிந்தனையுடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த உண்மையை நம்முடைய மனதில் நாம் ஒருமுறையேனும் ஓட்டி பார்க்க வேண்டும். வெற்றி எனும் இலக்கை நோக்கிச் செல்லவேண்டும். அதனை தவிர வேறு எந்த பிரச்சினையையும், நினைப்பையும் நாம் மனதில் வைத்துக்கொள்ளத் தேவையில்லை.
வேறு எந்த சிந்தனை இருந்தாலும், அதனைத் தூக்கி எரிந்துவிட்டு அதிமுக வெற்றிபெறுவதற்கு உங்களுடைய முழு ஆற்றலையும், அறிவையும் வழங்க வேண்டும். வெற்றிக் கனியைப் பறிக்கின்ற கரங்களாக உங்கள் கரங்கள் இருக்க வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைய ஒற்றுமையோடு செயல்படுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.
அதிமுகவினர் சார்பில் அளிக்கப்பட்ட 8,241 விருப்ப மனுக்களுக்கு நேற்று (மார்ச்4) ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடித்து, போட்டியிடவுள்ளோரின் பட்டியலையும் இறுதிசெய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : கரூரில் கூடைப்பந்து போட்டி தொடக்கம்