பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். சிவசங்கரை ஆதரித்து மார்ச் 26ஆம் தேதி திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவர் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த்து.
இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த ஆ. ராசா, "ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமி இருவரின் அரசியல் ஆளுமையை ஒப்பிட்டுப் பேசும்போது நான் பேசிய சில வார்த்தைகளை ஒட்டி வெட்டி சமூக வலைதளங்களில் பரப்புவதாக அறிகிறேன். அதற்கு நான் பொறுப்பல்ல. முதலமைச்சரை இழிவாகப் பேசுவது என் நோக்கமல்ல" என்று தெரிவித்தார்.
இதையடுத்து மார்ச் 28ஆம் தேதி திருவொற்றியூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் பழனிசாமி, ஆ.ராசா தனது தாயாரை இழிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டு கண்கலங்கினார். இதையடுத்து ஆ. ராசா, முதலமைச்சர் குறித்த விமர்சினத்திற்காக மனம் திறந்து மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டார்.
தொடர்ந்து முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி குன்னம் கிராம நிர்வாக அலுவலர் குன்னம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், கலகம் செய்யத் தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், தேர்தல் விதிமீறல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி குறித்தும், அவரது தாயார் குறித்தும் அவதூறாகப் பேசியது தொடர்பாக புதன் கிழமை (மார்ச் 31) மாலை 6 மணிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அலுவலரை சந்தித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.