பல்லாவரம் அடுத்த பம்மல் சரஸ்வதிபுரம் அருகே ரங்கா நகரில் உள்ள பார்க் ஒன்றில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சில இளைஞர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
இதனால் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, பயங்கர ஆயுதங்களுடன் இருந்ததால் பயந்துகொண்டு வீட்டிலேயே இருந்துள்ளனர். அப்போது சங்கர் நகர் காவல் துறையினர் யாரும் ரோந்துப் பணியில் வராததால் இரவு முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இந்தக் கொண்டாட்டத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் வீடியோவில் இருந்த நபர்களை சங்கர் நகர் காவல் துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில், திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த அருண் (24) என்பவர் பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது தெரியவந்ததையடுத்து, சங்கர் நகர் காவலர்கள் அருணை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் காவல் நிலையத்தில் வைத்து அருணுக்கு காவல் ஆய்வாளர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
![கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-accused-arreat-visual-script-7208368_15072020230720_1507f_1594834640_566.jpg)
பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரனையில், பல ஆண்டுகளாக அருண் பட்டா கத்தியால்தான் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி வந்தது தெரியவந்தது. இவருடன் குரோம்பேட்டையைச் சேர்ந்த முகேஷ் ராஜன் (17), கார்த்திக் பாண்டியன் (25), பாபா என்கிற பொன்முடி (17), திருநீர்மலையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (24), ராமமூர்த்தி (23), கோடீஸ்வரன் (20), நிரேஷ் குமார் (22) ஆகியோருடன் சேர்ந்து பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
இதையடுத்து ஊரடங்கை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் எல்லை மீறி நடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளி மாணவி விஷமருந்தி தற்கொலை: காதலனை தேடும் காவல்துறை