சென்னை: Oceanic edibles international limited நிறுவனம் நாடு முழுவதும் பழம், காய்கறிகள் மற்றும் கடல் தொடர்பான உணவு பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக ஜோசப் ராஜ் ஆரோக்கிய சாமி, விமலா ஜோசப் ஆரோக்கியசாமி, ஜேம்ஸ் வால்டர் ஆரோக்கியசாமி மற்றும் டாமினிக் சாவியோ ஆகியோர் உள்ளனர்.
இந்த நிறுவனம் விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் தனியாக பண்ணை வைத்து விளைவித்தும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும், சென்னையில் கோடம்பாக்கம், அமைந்தகரை, தியாகராய நகர், பெருங்குடி மற்றும் சூளைமேடு உள்ளிட்ட 12 இடங்களில் இன்று (ஆகஸ்ட் 10) காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த 2019ஆம் ஆண்டு தொழில் பெருக்கத்திற்காக பல்வேறு வங்கியில் இருந்து 104 கோடி ரூபாய் கடன் பெற்று, அந்த பணத்தை வேறு முறைகளில் செலவு செய்து வங்கிகளுக்கு 225 கோடி ரூபாய் வரை இந்த நிறுவனம் இழப்பீடு ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளது.
இந்த விசாரணையில், இந்த நிறுவனம் வெளிநாடுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்ததை அடுத்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து இன்று (ஆகஸ்ட் 10ஆம் தேதி) சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்கள், கன்சல்டிங் சர்வீஸ் அலுவலகம், இவர்களிடம் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைக்கு பிறகே வெளிநாடுகளில் எவ்வளவு சட்டவிரோதமாக முதலீடு செய்து உள்ளனர் என்பது தொடர்பாக தெரிய வரும் என அமலாக்கத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: Senthil Balaji: செந்தில் பாலாஜியின் சகோதரர் கட்டி வரும் வீடு முடக்கம் - முழு பின்னணி!