சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இருபது ஆண்டுகளுக்கும் மேல் பணி நிரந்தரம் செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு பணியாற்றி வருகின்றனர்.
மின் இணைப்பிற்குத் தேவையான குழி தோண்டுதல், கம்பம் நடுதல், வயர் இழுத்தல் போன்ற கடுமையான பணிகளை செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.380 தினக்கூலி வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியிருந்தார். எனினும், ரூ. 170-200 வரை என்ற குறைந்த ஊதியமே வழங்கப்படுவதாக ஒப்பந்த மின் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கஜா புயல், தானே புயல் போன்ற இயற்கை சீற்றத்தின் போது, நேரம் பார்க்காமல் உழைத்தவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது என ஒப்பந்த மின் ஊழியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில், அமைச்சர் அறிவித்த 380 ரூபாய் தினக்கூலியை வழங்கக் கோரியும், இயற்கைப் பேரிடர் காலத்தில் பணிபுரிந்த மின்வாரிய ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரியும் 100க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அந்த எச்சரிக்கையையும் மீறி ஒப்பந்த மின் ஊழியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரும் கைது செய்த காவல் துறையினர், பேருந்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதையும் வாசிங்க : மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!