சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, பிப்ரவரி 8ஆம் தேதி பெங்களூரிலிருந்து கிளம்பி தமிழ்நாடு வந்தார். அவரை வரவேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் அறிவழகன் காவல்துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.
இதை பரிசீலித்த காவல் துறையினர், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் அனுமதியளித்தனர். இதுதொடர்பான நோட்டீசை, அனுமதி கோரிய அறிவழகனிடம் கொடுக்காமல், தமிழ்நாடு எல்லைக்குள் வந்த சசிகலாவிடம் கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன் கொடுத்தார்.
அறிவழகன் அளித்த விண்ணப்பத்தின் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அவரிடம் கொடுக்காமல், சசிகலாவிடம் கொடுத்ததால் அவரை வரவேற்க திரண்டிருந்த தொண்டர்கள் இடையே பதற்ற நிலையை உருவாக்கியதால், காவல் துறை நிலை விதிகளை மீறிய டிஎஸ்பி சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சசிகலாவுக்கு வரவேற்பு: டிடிவி தினகரன் உணர்ச்சி பொங்க வாழ்த்து