ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் தன்னெழுச்சியாக பொருள்கள், உணவுகள் கொடுத்து உதவக் கூடாது என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு அரசின் செய்தித் துறை, கரோனா வைரஸ் தொற்று காலத்தில் துன்ப துயரத்தை அனுபவித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு, உணவுப் பொருள்கள் வழங்குவது தவறு, அதை மீறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு வெளியிட்டுள்ளது.
இத்தகைய உத்தரவு போட்ட ஈவு இரக்கமற்ற அந்த உள்ளத்தை கேட்கிறேன். தானும் செய்யமாட்டேன், மற்றவர்களும் செய்யக் கூடாது, செய்ய முன்வந்தால் தடுப்பேன் என்பதுதான், இந்த ஆட்சியின் வஞ்சக எண்ணமா? கருணை உள்ளத்தோடு, கண்ணீர் துடைக்கத் தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க எவராலும் இயலாது. இது ஜனநாயக நாடு, யாரும் எவருக்கும் உதவி செய்யலாம்; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம். கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக' என்ற வள்ளலார் வார்த்தைகளால் எச்சரிக்கை செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவைப் பரப்ப எச்சில் துப்பும் நபர்கள்? சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ உண்மை?