சென்னை விருகம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த மகளிர் விடுதிக்கு, 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசார் ராஜா மற்றும் குமரேசன் ஆகிய இருவரும், மதுபோதையில் சென்றுள்ளனர். அப்போது 2 பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதுதொடர்பாக 2 பெண்களும் அளித்த புகாரின் அடிப்படையில் 2 போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவை மேல் முறையீட்டு அதிகாரியான மாநகர காவல் ஆணையரும் உறுதி செய்தார். இதை எதிர்த்து 2 போலீசாரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, மனு தாரர்கள் தரப்பில், 2 போலீசாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதாலும், புகார் அளித்த 2 பெண்களிடமும் விசாரணை நடத்தப்படவில்லை என்பதாலும், பணி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அப்போது அரசு தரப்பில், புகார்தாரர்களை உதவி ஆணையர் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என்று எந்த சூழ்நிலையிலும் கருத முடியாது. விசாரணை விதிகளும், இயற்கை நீதியும் முறையாக பின்பற்றப்பட்டு பிறப்பிக்கப்பட்ட பணிநீக்க உத்தரவு சரி தான். 2 போலீசாரும் பணியில் நீடிக்க தகுதியில்லை. ஆகவே அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிறார் வழக்குகளுக்கு விதிமுறைகள் - சென்னை உயர் நீதிமன்றம்