சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் சக்தி சிதம்பரம் சினிமா பாரடைஸ் என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளியான காவலன் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெறுவதற்காக சக்தி சிதம்பரம், சென்னை அடையாரைச் சேர்ந்த சுந்தர் என்பவரிடம் ரூ. 23 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார்.
அதற்கு, ஒரு லட்சம் ரூபாய் வட்டி சேர்த்து 24 லட்சம் ரூபாயாக மூன்று மாதங்களில் திருப்பி தந்து விடுவதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சக்தி சிதம்பரம் பணத்தை திருப்பி தரவில்லை என்றும், அதனைத் திருப்பி கேட்டபோது, தனக்கும் குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சுந்தர் புகார் அளித்திருந்தார்.
பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அந்த புகாரின் அடிப்படையில் சக்தி சிதம்பரம் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் காவல் துறையினர் தன்னைக் கைது செய்யக்கூடும் என்பதால் முன் பிணை கோரி சக்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டதாக சக்தி சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால், அவகாசம் வழங்க வேண்டும் என புகார்தாரர் சுந்தர் தரப்பில் கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!