சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ’காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் 40 வருடங்களுக்குப் பிறகு இந்த தரிசனம் நடக்கிறது. இதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் வருகின்றனர்.
ஒரு நாளைக்கு நான்கு லட்சம் மக்கள் வரை பக்தர்கள் இங்கு வருவதாக செய்திகள் வருகின்றன. இதன் எண்ணிக்கை வரும் நாட்களில் கூடும். ஆனால் அவர்களுக்கு போதிய கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும் இன்று கூட்ட நெரிசலில் மயக்கமுற்ற 31 பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அரசுக்கு ஏதும் தகவல் வந்ததா? உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படுமா?
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, இதுகுறித்து முழுமையாக விவரம் கேட்டுள்ளதாகவும், தகவல் வந்த பின்பு சபையில் பதிலளிப்பதாகவும்கூறினார்.