சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், முதலமைச்சரின் செயல்பாடுகளை விமர்சித்தது, டெண்டர் முறைகேடு, வாக்கிடாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த கருத்து தெரிவித்ததாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக 18 குற்றவியல் அவதூறு வழக்குகள் அரசு சார்பில் தொடரப்பட்டன.
செய்தி வெளியிட்ட முரசொலி ஆசிரியர் செல்வம், கலைஞர் டிவி ஆசிரியர் திருமாவேலன் ஆகியோர் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் இதனை ரத்துசெய்யக் கோரி ஸ்டாலின் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்குத் தடைவிதித்திருந்தது.
அண்மையில் பொறுப்பேற்ற திமுக அரசு, முந்தைய ஆட்சியில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெற்று அரசாணை பிறப்பித்துள்ளது. அதேபோல ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள 18 அவதூறு வழக்குகளைத் திரும்பப்பெற தமிழ்நாடு அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்துசெய்யக் கோரி ஸ்டாலின் தாக்கல்செய்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மு.க. ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 18 குற்றவியல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான அரசாணை தாக்கல்செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் தொடர்பான விவரங்களை அட்டவணையாகத் தாக்கல்செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஸ்டாலின் தாக்கல்செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இந்த மனுக்கள் மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி நிர்மல்குமார், அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற்ற அரசாணையை ஏற்று, ஸ்டாலின் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுக்களை ஏற்று, அவர் மீதான அவதூறு வழக்குகளை ரத்துசெய்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் வார இறுதி ஊரடங்கு தளர்வு - கெஜ்ரிவால் முடிவு