சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் செயல்படும் தனியார் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் கரோனா சிகிச்சையைக் கண்காணிக்க சிறப்பு அலுவலரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
இந்த முக்கியப் பொறுப்பிற்கு அரியலூர் மாவட்ட கரோனா தடுப்புக் கண்காணிப்பாளராக இருந்த தரேஸ் அகமதுவை அரசு நியமித்து உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

இவர் மாநிலம் முழுவதும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் கரோனா சிகிச்சைகளையும், சிகிச்சை நடைபெறும் மையங்களையும் கண்காணித்து தமிழ்நாடு அரசுக்கு தகவல் தெரிவிப்பார் எனத் தெரிகிறது.
இதன்மூலம் சிகிச்சைப் பெறுவோர் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட தரேஸ் அகமது முன்னதாக மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பெண் குழந்தைகள் கல்வி, அரசுப் பள்ளி வளர்ச்சி, உழவர்களுக்குத் தேவையான உதவிகள் எனப் பல துறைகளில் சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தி மக்கள் மத்தியிலும், ஆட்சியாளர்கள் மத்தியிலும் நல்ல பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.